Search This Blog

Tuesday, July 6, 2010

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை

உலக கோப்பை தொடரில் “கால்பந்து இமயம்’ பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இம்முறை “நம்பர்-1′ அணியாக களமிறங்கிய பிரேசில், கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலிறுதியுடன் “குட்பை’ சொன்னது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

துங்கா தவறு


இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு…? முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.

தற்காப்பு பலவீனம்

தவிர, பிரேசில் அணி வழக்கமாக தாக்குதல் பாணியிலான ஆட்டத்துக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும். இது துங்கா வந்த பிறகு தலைகீழாக மாறியது. தற்காப்பு பகுதியை பலப்படுத்தினார். ஆனால், முக்கியமான காலிறுதியில் பலமாக கருதப்பட்ட தற்காப்பு பகுதியே பலவீனமாக மாறியது. பிலிப் மெலோ 'சேம்சைடு’ கோல் அடித்தார். கோல்கீப்பர் ஜூலியோ சீசரும் மோசமாக செயல்பட்டார்.

கடந்த 1994ல் கேப்டனாக இருந்து அணிக்கு கோப்பை பெற்று தந்த துங்கா, இம்முறை தனது தவறான உத்திகளால், அணியின் கோப்பை கனவை தகர்த்து விட்டார்.

ரசிகர்கள் சோகம்

வழக்கமாக 'சம்பா’ நடனத்துடன் வெற்றியை கொண்டாடும் பிரேசில் ரசிகர்கள், இம்முறை உலக கோப்பை தொடரில் இருந்து தங்களது அணி வெளியேறியதும் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கடும் சோகத்தில் காணப்பட்டனர். பாலோ காமா என்ற ரசிகர் கூறுகையில்,” எல்லாம் முடிந்து விட்டது. எதையும் நம்ப முடியவில்லை. வீரர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை,”என்றார்.

விலகுகிறார் துங்கா

தோல்விக்கு முழு பொறுப்பேற்று பிரேசில் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து துங்கா விலகுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,”மிகவும் கவலையாக இருக்கிறது. யாரும் தோற்பதற்காக விளையாடுவதில்லை. அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்,”என்றார்.

இனி சொந்த மண்ணில்…

கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசிகர் தற்கொலை


பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
Source:www.lankasrisports.com/

No comments:

Post a Comment